Sunday, March 28, 2010

பதிவர்கள் சங்கம் / சங்கமம் - அடுத்தது என்ன?

நேற்று நடைபெற்ற, பதிவர்கள் சங்கம் அமைப்பது தொடர்பான சந்திப்பிற்கு நானும் சென்றிருந்தேன். ஏற்கனவே அறிமுகமான/அறிமுகமில்லாத பதிவர் நண்பர்களையும், சங்கம் துவக்குவதில் இருக்கும் சாதக/பாதகங்கள் பற்றிய அவர்களின் கருத்துக்களையும் சந்திக்க நேர்ந்தது. நானும் என் சிற்றறிவுக்கு(?) எட்டிய சில சந்தேகங்களை எழுப்பினேன்.

பதிவர்கள் தனித்தனி குழுக்களாக செயல்படாமல் ஒருங்கிணைந்து ஒரே குழுமமாய், குடும்பமாய் இயங்கும் வசதியை அமைத்துத் தரவிருக்கும் இந்த பதிவர் சங்கம் அமைக்கும் ஆலோசனையை நான் முற்றிலும் வரவேற்கிறேன். கிட்டத்தட்ட அங்குவந்திருந்த அனைவரின் மனோநிலையும் அப்படித் தான் இருந்தது.

ஆனால், ஒரு குழுவாய் எப்படி இயங்கப் போகிறோம், ஒவ்வொருவரின் பங்களிப்பு என்ன, இதன்மூலம் பதிவர்களுக்கும், பதிவர்களால் மற்றவர்களுக்கும் ஏற்படப் போகும் நன்மை/தீமைகள் என்னவாக இருக்கும், பொதுவில் ப்ளாக் என்பது நம் சொந்த விருப்பு வெறுப்புகளையும், படைப்புகளையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு இடமாயிற்றே; இதில் தனி நபர் சுதந்திரம் (இப்ப மட்டும் என்ன வாழுது) எத்துனை முக்கியத்துவம் பெறும் போன்ற அடிப்படை கேள்விகள் தான் எனக்குள் எழுந்தவை...

உண்மையைச் சொல்லப் போனால் இவைபற்றித் தான் நேற்று விவாத்திருக்க வேண்டும். ஏனெனில் வந்திருந்த அனைவருக்குமே ஒருகுழுவாய் நாம் சங்கமிக்கப் போகிறோம் என்கிற உணர்வுடன் மட்டுமே அங்கு கூடியிருந்தார்கள். திரு.ராதாகிருஷ்ணன் ஐயா, திரு.நர்சிம், திரு.டோண்டு, திரு.அர்விந்த்(பெங்களூர்), திரு.லக்கி ஆகியோரின் பேச்சுக்களும் அவ்வண்ணமே இருந்தது. ஆனால்.. சங்கம் வேண்டுமா, வேண்டாமா என்கிற ரீதியில் விவாதம் திசை திரும்பியது மாதிரி ஒரு உணர்வு.

காரணம், நான் முன்பு கூறியதுபோல் அடிப்படையான விஷயங்களை சரியாக தயார் செய்திராமல், நேரடியாக விவாதத்தை துவக்கியது தான். "அத்தியாவசிய நேரங்களில் பதிவர்கள் தங்களுக்குள் தங்களாலான உதவிகளை செய்யவும், பெற்றுக் கொள்ளவும் இந்த சங்கம் ஒரு காரணமாய் இருக்கட்டும்" என்ற நர்சிம்'மின் பேச்சு மட்டுமே ஆரோக்யமான சிந்தனையாய்ப் பட்டது. (அவரை முன்னால் பேச அனுமதித்திருக்கலாம்.. ஒருவேளை சந்திப்பு ஓரளவிற்காவது சரியான திசையில் சென்றிருக்கும்.)

அதைவிடுத்து, கூகிளைப் போய் கேட்கலாம், அரசாங்கத்தைப் போய் கேட்கலாம், அவங்களைப் போய் கேட்கலாம், இவங்களைப் போய் கேட்கலாம், ஊர் கூடினாத் தான் தேர் இழுக்க முடியும், ஒத்தை மரம் தோப்பாகாது என்று சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தது அசுவாரஸ்யமாய் இருந்தது.

நாம் அடுத்தகட்டம் நோக்கி செல்லும்போது அதற்கான முன்னேற்பாடுகளையும், அவ்விடத்தில் நமக்கான பணியென்ன, நமது பங்களிப்பு என்ன ஆகிய குறைந்தபட்ச விஷயங்களையாவது சிந்திக்க வேண்டும். அப்போது தான், நம் நகர்வும் ஆக்கப் பூர்வமாய் இருக்கும். அப்புறம் பார்த்துக்கலாம், அங்க போய் பண்ணிக்கலாம் என்பதெல்லாம் கதைக்கு ஆகாது.

நமது அடுத்த சந்திப்பில் இதுபற்றி மட்டுமே பேசுவோம். இது தான் என் கருத்து. மற்றபடி, சங்கம் வேண்டுமென்பதில் எனக்கெந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இந்த சங்கத்தில் இணைய விரும்புவோருக்கு வசதியாய் மின்னஞ்சல் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.. (tamilbloggersforum@gmail.com) நான் அனுப்பியாச்சு.. அது தொடர்பான நண்பர் "பலாபட்டறை" ஷங்கர் அவர்களின் பதிவு இங்கே!

Wednesday, February 17, 2010

பதிவர்கள் புத்தகங்கள்...சின்னதாய் ஒரு அலசல்

பதிவுலக நண்பர்கள், திரு.நர்சிம், திரு.பரிசல்காரன், திரு.கேபிள் சங்கர் ஆகிய மூவரும் தங்கள் முதல் படைப்பை சிறுகதைத் தொகுப்புகளாக சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.. அது எங்களுக்குத் தெரியும்.. நீ என்ன சொல்லவந்த.. அதை சொல்லு முதல்ல.. அப்படின்னு சொல்றீங்களா??? ரைட்டு..

இவர்களின் இந்தக் கதைகள் எல்லாம் ஏற்கெனவே, இவர்களின் பதிவுகளில் படித்தது தான் என்றாலும், புத்தகமாய் அதைக் காணும் பொழுது ஒரு இனம்புரியா சுவாரஸ்யம்.. மூன்று புத்தகங்களையும் ஒரே மூச்சில் தான்(வெவ்வேறு நாட்களில்) படித்தேன் என்றாலும் நான் படித்த வரிசையிலேயே பகிர்ந்து கொள்கிறேன்..

==========================================

அய்யனார் கம்மா: (ஆசிரியர்: நர்சிம்)

நான் காசு கொடுத்து வாங்கிய முதல் சிறுகதை புத்தகம்.. மொத்தம் பதிமூன்று கதைகள்.. இதில் முதல் கதையே அய்யனார் கம்மா தான்.. அழகான கிராமத்துக்கு நம்மை கூட்டிப் போய், மாட்டுக்கு லாடம் அடிப்பதைக் காட்டித் தந்து, வெள்ளந்திப் பேச்சுகளின் சுவாரஸ்ய நடையினூடே நம்மையும் அறியாமல், சற்று நேரத்தில் கதையின் நாயகன் செய்யப் போகும் கொலைக்கு நம்மையும் சாட்சியாக்கி விடுகிறார். இந்தக் கதையில் என்னை மிகக் கவர்ந்த வரிகள்.. ஒரு மாட்டின் உரிமையாளர், லாடம் அடிப்பவனிடம் சொல்லும் "எம்புட்டு பாரம்ண்டாலும் இழுத்துப் புடும்யா எந்தெய்வம்".. தான்.. அந்த வரியில் தான் எத்துனை நன்றி கலந்த நம்பிக்கை..
அடுத்த கதை.. தந்தையுமானவன்.. என்னை பொறுத்தவரை நர்சிம்மின் மாஸ்டர் பீஸ்.. பிறந்த அன்றே குழந்தையை எமனிடம் வாரிக் கொடுப்பதென்பது எத்தனைப் பேருக்கு நடந்திருக்கும்? இருந்தாலும் அந்த தந்தையின் மனவேதனையை படிப்பவர்களும் புரிந்து கொள்ளவோ, பகிர்ந்து கொள்ளவோ இயலுமா??... முடியும் என்று நிரூபித்திருக்கிறார் தன் எழுத்தால்.. இந்தக் கதையின் வீச்சு படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.. படிக்காதவர்கள் தேடித் பிடித்து படிக்கவும்..

தொடர்ந்து வரும் கதைகளில் வெகு லாவகமாய் தேர்ந்த வரிகளின் மூலம் உறவுகளையும், உணர்வுகளையும் நம்முள் விதைத்துச் செல்கிறார் நர்சிம்.. (உ.ம்:: செம்பட்டைக் கிழவி, ம'ரணம்', சந்தர்ப்ப வதம்).. நகைச்சுவைக்கு "தலைவர்கள்", மற்றும் "வெத்தலைப் பெட்டி" ஆகியவையும் உண்டு..


============================================

டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்
(ஆசிரியர்: பரிசல்காரன்)


கவித்துவமான புத்தகத் தலைப்பு.. 17 கதைகள், 71 பக்கங்கள்... முதல் கதையான "தனிமை-கொலை-தற்கொலை"யில் கதையின் நாயகனின் நட்பும் காதலும் நிறைந்த குழப்பமான மனநிலையை பரபரப்பான சொற் பிரயோகங்கள் மூலம் படிக்கும் நம்மிடம் தந்துவிடுவது மிகச் சிறப்பு.. கிட்டத்தட்ட எல்லா கதைகளையும், கதையின் நாயகனே நம்மிடம் விவரிப்பது போல் இருப்பதால், ஆரம்பம் முதல் கடைசி வரை நம்மால் காட்சிகளையும் கதையின் முக்கிய பாத்திரங்களையும் அருகிலிருந்து கவனிக்க முடிகிறது.. பரிசல் தனது வழக்கமான நேர்த்தியான மற்றும் தெளிந்த எழுத்து நடையில் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார், ஒரு பிரச்சனையும் இல்லாமல்..

பட்டர்பிளை எப்ஃபெக்டும், டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் சிறுகதையும் சிம்ப்ளி சூப்பர்ப்.. இவரின் எல்லாக் கதைகளிலும் வரும் ஏதாவது ஒரு கதாபாத்திரம் நாம் அனைவரும் சந்தித்திருக்கக் கூடிய அல்லது அதிகம் கேள்விபட்டிருக்கக் கூடிய ஒரு நபரை நம் கண்முன் நிறுத்துவதால், நம்மால் இன்னும் ஆழ்ந்து வாசிக்க முடிகிறது.. (உ.ம்:: மாற்றம், நட்பில் ஏனிந்த பொய்கள், ஸ்டார் நம்பர் ஒன்..)

மேலும், நான் அவன் இல்லை, கைதி, மனசுக்குள் மரணம் போன்ற சஸ்பென்ஸ் நிறைந்த கதைகளும், உணர்வுகளின் வலியை வருடிக் கொடுக்கும் மயிலிறகுகளாய் இருளின் நிறம், நட்சத்திரம் ஆகிய கதைகளும் உண்டு..


===============================================

லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்.. (ஆசிரியர்: கேபிள் சங்கர்)


"முத்தம்" என்ற சுறுசுறு கதையில் ஆரம்பித்து மொத்தம் பதிமூன்று கதைகள்.. சொன்னது போலவே, விறுவிறுப்பான நடையில் புதிய தளங்களில் அமைந்துள்ளது எல்லா கதைகளும்.. கேபிள் சங்கர் அவர்கள், திரை-இயக்குனர் என்பதால் காட்சிப் படுத்தல்கள் வெகு இயல்பாய் அமைவது கதைகளுக்கு கூடுதல் பலம்..

இரண்டாவது கதையான "லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்" வாழ்கை வாழ்வதற்கே என்பதை அழுத்தமாய் பதிவு செய்கிறது.. முக்கால்வாசிக் கதைகளில், வர்ணனைகள் காமத்தின் உச்சம் தொட்டு திரும்புகின்றது.. ஆனால் அவை அந்தந்த கதைக்குத் தேவையானவைகள் தான் என்பது வாசிப்பு நிறைவுறும் போது கவனத்துக்கு வருகிறது..

மிகச்சிறந்த கதைகளென்று குறிப்பிட வேண்டுமானால், காதலின் வீரியம் சொல்லும் "மாம்பழ வாசனை" மற்றும் உறவுகளின் உள்ளம் சொல்லும் "நண்டு" ஆகியவற்றைச் சொல்லலாம்.. "ஆண்டாள்", "துரை-நான்-ரமேஷ் சார்" இரண்டும் கூட மேற்சொன்ன வகையறாவே..

"போஸ்டர்", "காமம் கொல்", "ராமி-சம்பத்-துப்பாக்கி" ஆகிய சுவாரஸ்ய திருப்பங்கள் நிறைந்த கதைகளும் உண்டு..


======
சரி.. இவ்வளவு சொன்னியே, ஒரு குறையும் இல்லையா அப்படின்னு கேட்டீங்கன்னா, நிச்சயம் சிறுசிறு குறைகள் இருக்கு... பதிவில் படித்தபோது இருந்த டெம்போவுக்கும், புத்தகமாய் படிக்கும் போது ஏற்படும் அனுபவத்துக்கும் சற்றேறக்குறைய வித்தியாசம் தெரிகிறது.. ஒரு சில கதைகள் சட்டென முடிந்துவிடுவது போன்ற பிரமையும் ஏற்படுகிறது..

ஆனால்.. ஒட்டுமொத்தமாய் பார்க்கும்போது.. இவைகள் அனைத்தும் எளிதில் களையக் கூடியவை தான் என்பதும், இவர்களின் எதிர்வரும் படைப்புகளில் இவை நிச்சயம் காணப்படாது என்பதுமே நான் புரிந்து கொண்டது..

எனவே, முடிந்தவர்கள் இந்த புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்.. வாழ்த்துங்கள்..!!!

Tuesday, February 16, 2010

கிரிக்கெட் - பிடித்ததும் பிடிக்காததும்

எனக்கும் கிரிக்கெட்டுக்கும் உள்ள உறவு எப்படிப் பட்டதுன்னா... நான் அப்போ ஏழாவது படிச்சிட்டு இருந்தேன்..( டேய், நீ இப்போவரைக்கும் அவ்வளோ தானடா படிச்சிருக்கே) சரி விடுங்க.. விஷயத்துக்கு வருவோம்..
================================================================
பதிவர் நண்பர் மோகன் குமார் கிரிக்கெட் குறித்தான ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறார்.

வழக்கம் போல, இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

1. பிடித்த கிரிக்கெட் வீரர்? சச்சின், லாரா

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்? சாஹித் அப்ரிடி (அதிரடி தவிர எல்லாமே அழுகுணி தான்)

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் க்ளென் மெக்ராத்

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் தில்ஹாரா பெர்னாண்டோ

5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே, முரளிதரன்

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் அஜந்தா மெண்டிஸ்

7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் சச்சின், ஷேவக், பாண்டிங்

8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் மிஸ்பா உல் ஹக்

9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் கில்க்ரிஸ்ட், கங்குலி, மைக் ஹஸ்ஸி

10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் ரஸ்ஸல் அர்னால்ட்

11. பிடித்த களத்தடுப்பாளர் ஜான்டி ரோட்ஸ், யுவராஜ் சிங்

12. பிடிக்காத களத்தடுப்பாளர் இன்சமாம் உல் ஹக்

13. பிடித்த ஆல்ரவுண்டர் பிளின்டாப், சைமண்ட்ஸ்

14. பிடித்த நடுவர் சைமன் டாபல், டேவிட் ஷெபெர்ட்

15. பிடிக்காத நடுவர் அசோகா டீ சில்வா, அமீர் சாயீபா

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் சித்து, ரவிசாஸ்திரி, ஹர்ஷா போகலே, சுனில் கவாஸ்கர்

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் டோனி கிரெய்க் (நம்மாளுங்க தூக்கி அடிச்சாலே அவுட்'ன்னு கத்துவார்)

18. பிடித்த அணி இந்தியா, ஆஸ்திரேலியா

19. பிடிக்காத அணி ஒப்புக்கு ஆடும் நாடுகள்

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- இந்தியா - பாகிஸ்தான், இந்தியா -ஆஸ்திரேலியா

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- ஜிம்பாப்வே - பங்களாதேஷ்

22. பிடித்த அணி தலைவர் ஹான்சி குரோன்யே, சவ்ரவ் கங்குலி

23. பிடிக்காத அணித்தலைவர் யூனுஸ் கான்

24. பிடித்த போட்டி வகை ட்வென்டி ட்வென்டி

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி மாத்யூ ஹைடன், ஆடம் கில்கிரிஸ்ட்

26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி சிவ சுந்தர் தாஸ் மற்றும் சடகோபன் ரமேஷ்

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் சச்சின், லாரா

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் சச்சின்


நான் அழைக்கும் பதிவர்கள்:

நர்சிம்
நாஞ்சில் பிரதாப்
ரோமியோ பாய்

Tuesday, January 12, 2010

பொங்கலோ பொங்கல்

pongal
பொங்கல் பண்டிகை.. மொத்தமாய் நான்கு நாட்கள் விடுமுறையையும், நான்கு ஜென்மங்களின் சந்தோஷங்களையும் ஒருசேர நம் கையில் திணித்துவிட்டுப் போகும் பண்டிகை.. எந்த விஷயத்துக்கும் ஆரம்பம் தான் அடித்தளம் போன்று பொங்கலின் ஆரம்பமான போகிப் பண்டிகையே சும்மா களைகட்டும்..

போகியின் முதல் நாளே, பழைய டயர்களைத் தேடியபடி எங்கள் குழு தெருத் தெருவாய் படை எடுக்கும்.. கிடைத்துவிட்டால் போதும்.. டவுசர்களைக் காக்கும் அரைஞ்சாண் கயிற்றில் செருகப் பட்டிருக்கும் குச்சிகள் வாளென உருவப்பட்டு டயரைத் தட்டி தட்டி, ஓட்டிக் கொண்டே வருவோம்.. அந்தக் குச்சியைக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் வேகம் கூட்ட குறைக்க முடியும்.. டயரின் பக்கவாட்டில் லாவகமாய்த் தேய்த்தால் நினைத்தபடி திரும்பும்.. கொண்டுவந்த டயர்களை பத்திரப் படுத்துவோம்.. அடுத்தது மேளம் தான்.. ஒருமுறை, போகிக்கு வாங்கித் தந்த மேளத்தை ஓரிருநாள் முன்னரே அடித்துக் கிழித்துவிட்ட படியால், போகிக்கு முந்தைய நாள் இரவுதான் மேளம் வாங்கித் தருவார்கள் வீட்டில்.. அதை அடிக்க ஏதுவாய் நாங்கள் தாரை உருட்டி தொப்பியாய் அணிவித்த குச்சிகள் எங்களை விடத் தயாராய் இருக்கும்.. எப்போதடா விடியும் என்ற நினைப்பு மட்டுமே கனவிலும் வந்து தொலைக்கும்..

மார்கழிக் குளிர் மிச்சமிருக்கும் அந்த அதிகாலை வேளையில், முன்தினமே தெருத் தெருவாய்த் தேடி, கண்டெடுத்த பழைய டயர்களும், வீட்டிலிருக்கும் பழைய பாய், தலையணை மற்றும் இன்னபிற குப்பைகளும் எங்கள் தெருவின் முச்சந்தியில் கொளுத்தப்படும்.. நண்பர்கள் சுற்றி நின்று மேளத்துக்கு சூடு காட்டி, அதைக் கிழியும் வரை அடிக்கும் நிகழ்வுகள் அரங்கேறும்.. பனிமூட்டத்தை புகைமூட்டம் வெற்றி கொள்ளும்.. கரி படிந்த முகத்துடன் வீட்டுக் போய் அம்மாவிடம் திட்டு வாங்கிக் குளித்து, ஒருவழியாய் பொங்கலுக்குத் தயாராகியிருப்போம்..

"நீ என்ன ட்ரெஸ்'டா வாங்கினே..?, நீ என்ன கலர் டிரஸ் வாங்கினே...?" என்ற கேள்விகள், கரும்பு வாங்கியாச்சா, பொங்கப் பானை வாங்கியாச்சா போன்ற விசாரிப்புகள் வளைய வந்து கொண்டிருக்கும்போதே பொங்கலும் வந்துவிடும்.. காலையில் எழுந்ததும் குளித்து, புத்தாடை அணிந்து கையில் ஒன்றரை முழக் கரும்புடன் ஒரு கெத்தாக போய் நண்பர்கள் வீட்டுக்குப் போய் அவர்களைக் கூப்பிடுவேன்.. எதிர்படும் எல்லோருக்கும் "ஹேப்பி பொங்கல்" நிச்சயம்.. எல்லா வீட்டிலும் சீரான இடைவெளிகளில் பூஜைகள் முடிந்து "பொங்கலோ பொங்கல்" கேட்கும்.. அக்கம்பக்கம் வீடுகளிலிருந்து அவர்களின் பொங்கல், வடை, பாயசம் எல்லாம் பகிர்ந்து கொள்ளப்படும்.. இனிப்புகள், சுவையான பொங்கலுடன் மதிய உணவு, சொந்தங்கள் வருகை என வீடே அமர்க்களப்படும்..

அடுத்துவரும் மாட்டுப் பொங்கலும், காணும் பொங்கலும் ஊர்சுற்றவே நேரம் சரியாய் இருக்கும்.. நான்கு நாட்கள் போனதே தெரியாது.. விடுமுறை முடிந்து திரும்பவும் பள்ளிக்கு போக வேண்டுமென்றாலும் அடுத்தப் பொங்கலை எப்படி ஜமாய்க்கலாம் என்ற மனக் கணக்குகள் எல்லோருக்குள்ளும் சுழன்று கொண்டிருக்கும்..

இப்போது அப்பார்ட்மென்ட்ஸ்களில் அவரவர் பிளாட்களில் கியாஸ் ஸ்டவ்வில் எவர்சில்வர் பாத்திரங்களில் பொங்கல் பொங்கப் போவது நிச்சயம் என்றாலும், கடந்து போய்விட்ட அந்த தருணங்கள் கிடைக்கப் போவதே இல்லை சர்வ நிச்சயமாய்.. பக்கத்துக்கு பிளாட்களில் இருப்பவர்களுக்குத் தொந்தரவில்லாமல் கூவத் தான் வேண்டும்.. "பொங்கலோ பொங்கல்"..