Thursday, October 6, 2011

தலைப்பில்லாக் கவிதைகள்

-------------

மழையிரவின் பயணத்தில்
வாகன வெளிச்சம்
புரட்டிப் போடும் கிழிந்த கோணியை
அடிபட்ட நாயாயிருக்குமோ
என்றெண்ணும் நொடிப் பொழுதில்
பரிதாபத்தை வீழ்த்துகிறது
ஆழ்மன வக்கிரம்!

------------------

நீண்ட பெரும் யோசனைக்குப்
பின் தான் தீர்மானித்தேன்
இதற்கு
தலைப்பு என்று தனியாய்
ஏதும் தேவையில்லையென்று

----------------------

எங்கே தடம் மாறியது
தெரியவில்லை
தண்டவாள விளிம்பில்
வழுக்கியபடி
என்னுடன் பயணித்த
நிலவொளி

-----------------------------

நனையாதிருக்க நான் செய்த
பிரயத்தனங்களைக் காட்டிலும்
கவிதையாக்க முயன்றதில்
தான் இழந்தேன்
இன்னொரு மழையை


-------------------------