Tuesday, January 12, 2010

பொங்கலோ பொங்கல்

pongal
பொங்கல் பண்டிகை.. மொத்தமாய் நான்கு நாட்கள் விடுமுறையையும், நான்கு ஜென்மங்களின் சந்தோஷங்களையும் ஒருசேர நம் கையில் திணித்துவிட்டுப் போகும் பண்டிகை.. எந்த விஷயத்துக்கும் ஆரம்பம் தான் அடித்தளம் போன்று பொங்கலின் ஆரம்பமான போகிப் பண்டிகையே சும்மா களைகட்டும்..

போகியின் முதல் நாளே, பழைய டயர்களைத் தேடியபடி எங்கள் குழு தெருத் தெருவாய் படை எடுக்கும்.. கிடைத்துவிட்டால் போதும்.. டவுசர்களைக் காக்கும் அரைஞ்சாண் கயிற்றில் செருகப் பட்டிருக்கும் குச்சிகள் வாளென உருவப்பட்டு டயரைத் தட்டி தட்டி, ஓட்டிக் கொண்டே வருவோம்.. அந்தக் குச்சியைக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் வேகம் கூட்ட குறைக்க முடியும்.. டயரின் பக்கவாட்டில் லாவகமாய்த் தேய்த்தால் நினைத்தபடி திரும்பும்.. கொண்டுவந்த டயர்களை பத்திரப் படுத்துவோம்.. அடுத்தது மேளம் தான்.. ஒருமுறை, போகிக்கு வாங்கித் தந்த மேளத்தை ஓரிருநாள் முன்னரே அடித்துக் கிழித்துவிட்ட படியால், போகிக்கு முந்தைய நாள் இரவுதான் மேளம் வாங்கித் தருவார்கள் வீட்டில்.. அதை அடிக்க ஏதுவாய் நாங்கள் தாரை உருட்டி தொப்பியாய் அணிவித்த குச்சிகள் எங்களை விடத் தயாராய் இருக்கும்.. எப்போதடா விடியும் என்ற நினைப்பு மட்டுமே கனவிலும் வந்து தொலைக்கும்..

மார்கழிக் குளிர் மிச்சமிருக்கும் அந்த அதிகாலை வேளையில், முன்தினமே தெருத் தெருவாய்த் தேடி, கண்டெடுத்த பழைய டயர்களும், வீட்டிலிருக்கும் பழைய பாய், தலையணை மற்றும் இன்னபிற குப்பைகளும் எங்கள் தெருவின் முச்சந்தியில் கொளுத்தப்படும்.. நண்பர்கள் சுற்றி நின்று மேளத்துக்கு சூடு காட்டி, அதைக் கிழியும் வரை அடிக்கும் நிகழ்வுகள் அரங்கேறும்.. பனிமூட்டத்தை புகைமூட்டம் வெற்றி கொள்ளும்.. கரி படிந்த முகத்துடன் வீட்டுக் போய் அம்மாவிடம் திட்டு வாங்கிக் குளித்து, ஒருவழியாய் பொங்கலுக்குத் தயாராகியிருப்போம்..

"நீ என்ன ட்ரெஸ்'டா வாங்கினே..?, நீ என்ன கலர் டிரஸ் வாங்கினே...?" என்ற கேள்விகள், கரும்பு வாங்கியாச்சா, பொங்கப் பானை வாங்கியாச்சா போன்ற விசாரிப்புகள் வளைய வந்து கொண்டிருக்கும்போதே பொங்கலும் வந்துவிடும்.. காலையில் எழுந்ததும் குளித்து, புத்தாடை அணிந்து கையில் ஒன்றரை முழக் கரும்புடன் ஒரு கெத்தாக போய் நண்பர்கள் வீட்டுக்குப் போய் அவர்களைக் கூப்பிடுவேன்.. எதிர்படும் எல்லோருக்கும் "ஹேப்பி பொங்கல்" நிச்சயம்.. எல்லா வீட்டிலும் சீரான இடைவெளிகளில் பூஜைகள் முடிந்து "பொங்கலோ பொங்கல்" கேட்கும்.. அக்கம்பக்கம் வீடுகளிலிருந்து அவர்களின் பொங்கல், வடை, பாயசம் எல்லாம் பகிர்ந்து கொள்ளப்படும்.. இனிப்புகள், சுவையான பொங்கலுடன் மதிய உணவு, சொந்தங்கள் வருகை என வீடே அமர்க்களப்படும்..

அடுத்துவரும் மாட்டுப் பொங்கலும், காணும் பொங்கலும் ஊர்சுற்றவே நேரம் சரியாய் இருக்கும்.. நான்கு நாட்கள் போனதே தெரியாது.. விடுமுறை முடிந்து திரும்பவும் பள்ளிக்கு போக வேண்டுமென்றாலும் அடுத்தப் பொங்கலை எப்படி ஜமாய்க்கலாம் என்ற மனக் கணக்குகள் எல்லோருக்குள்ளும் சுழன்று கொண்டிருக்கும்..

இப்போது அப்பார்ட்மென்ட்ஸ்களில் அவரவர் பிளாட்களில் கியாஸ் ஸ்டவ்வில் எவர்சில்வர் பாத்திரங்களில் பொங்கல் பொங்கப் போவது நிச்சயம் என்றாலும், கடந்து போய்விட்ட அந்த தருணங்கள் கிடைக்கப் போவதே இல்லை சர்வ நிச்சயமாய்.. பக்கத்துக்கு பிளாட்களில் இருப்பவர்களுக்குத் தொந்தரவில்லாமல் கூவத் தான் வேண்டும்.. "பொங்கலோ பொங்கல்"..