இது கொஞ்ச நாளைக்கு முன் நடைபெற்ற ஒரு சம்பவம். நானும் என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் செந்திலும் வெவ்வேறு அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தோம். அன்று மாலை எங்கள் இருவருக்கும் தெரிந்த மற்றொரு நண்பரின் திருமண வரவேற்புக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து செல்வதாக திட்டம்.
மாலை நான் எனது அலுவலகத்திலிருந்து கிளம்பும் முன் அவனைத் தொடர்பு கொள்ள முயன்றேன். செல்பேசியில் தொடர்பு கொள்ள முடியாததால் அவனின் அலுவலக எண்ணுக்கு அழைத்தேன்.
எதிர்முனையில் ஒரு முரட்டுக்குரல் பேசியது.
"யார் வேணும்??"
"நான் செந்தில் கிட்ட பேசணும்..."
"நீ யார் சொல்லுங்க???" - வடமாநிலத்தை சேர்ந்தவர் போல.. தமிழ் தடுமாறியது அவரிடம்.
"நான் அவன் பிரெண்டு பேசறேங்க..."
"என்ன.. அவன் இவன்னு சொல்ற?"...
(இதுவேறயா என்று நினைத்துக் கொண்டு...) "சார்.. நான் அவன் என் பிரெண்டு... அப்படி தான் கூப்பிட்டுக் கொள்வோம்.. கொஞ்சம் செந்தில் கிட்ட போன் கொடுக்கறீங்களா...???"
"என்னம்மா நீ? நான் சொல்லிக்கிட்டே இருக்கு.. நீ செந்தில் கிட்ட போன் கொடு சொல்றீங்க?..."
இது என்னடா தமிழுக்கு வந்த சோதனை என்று எண்ணியபடி...
"சார்.. கொஞ்சம் செந்தில் கிட்ட போன் கொடுக்கறீங்களா...???" என்றேன் மறுபடி...
"முதொல்ல நீங்க மரியாதையா பேசு..." என்றது அந்தக் குரல்...
வந்த கடுப்புக்கு... "நீ முதல்ல தமிழ ஒழுங்கா பேசு" என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன்.
சிறிது நேரத்தில் செந்தில் என்னை அழைத்தான்.
"சொல்டா.. எங்க இருக்க??" இது நான்...
"அதைவிடுடா.. என் மேனேஜர் கிட்ட என்னடா சொன்ன?.. என்னை உள்ள கூப்பிட்டு கிழி கிழின்னு கிழிச்சிட்டாரு" என்றான் சோகமாக...
மச்சி சாரிடா... அவர் உன் மேனேஜரா???... கடுப்பேத்திட்டாருடா.. என்றபடி விஷயத்தை விளக்கினேன்...
நல்லா கடுப்பான போ.. அந்தாளு நார்த் இந்தியாடா... சமாளிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு... என்றான் சலிப்புடன்...
அதுக்கப்புறம் என்ன ஆனாலும் சரி.. அவன் அலுவலக எண்ணுக்கு மட்டும் நான் தொடர்பு கொள்வதேயில்லை..